இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்குக் கட்சிப் பிரமுகர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், அவரது சமாதியிலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கலாநிதி ஜெபநேசன் அடிகளார், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நினைவுப் பேருரை நிகழ்வு ஆரம்பமானது. தந்தை செல்வாவின் உருவப்படத்துக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்வின் வரவேற்புரையைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும், ஆசியுரையை யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்னம் அடிகளாரும் நிகழ்த்தினர்.
தலைமையுரையைத் தந்தை செல்வா நினைவு அறங்காவலர் குழு தலைவர் கலாநிதி ஜெபநேசன் அடிகளார் வழங்கினார்.
“சமஷ்டி முறைமையும், அரசமைப்புச் சீர்திருத்தப் பாதையும்” எனும் தலைப்பில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் விசேட நினைவுப் பேருரையை ஆற்றினார்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையின் செயலாளர் கலாநிதி விக்னேஸ்வரன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி தி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட புத்திஜீவிகள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.










