சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார்: அரசு ஆராய்வு!

சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல இடங்களில் கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் இன்று (28) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சுற்றுலா செயலணிக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

சிவனொளிபாதமலையை மையப்படுத்தி கேபிள் கார் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு நீண்டகாலமாக பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக கிகிலியாமான, எல்ல உள்ளிட்ட மேலும் சில சுற்றுலாத் தலங்களும் இவ்வாறான கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிக்கக்கூடிய இடங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

இவ்விடங்களில் அந்தத் திட்டத்தை ஆரம்பிப்பது குறித்த சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், அதற்குத் தேவையான ஆரம்பகட்ட அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அது தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கைகள் குறித்து ஆராய்வதற்கும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

மே மாதம் 25ஆம் திகதி முதல் 40 நாடுகளுக்கு இலவச விசா வசதியை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த வசதியை வழங்குவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யால உள்ளிட்ட 19 வனவிலங்கு சரணாலயங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக வனஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்கள் அனைத்திலும் உள்ள மலசலகூடங்கள் உள்ளிட்ட சுகாதார வசதிகளின் பராமரிப்புப் பணிகள் தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டதுடன், அந்த இடங்களில் புதிய மலசலகூடங்களை நிர்மாணிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இது ஒரு சிறிய பிரச்சினையாகத் தோன்றினாலும், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் இது மிக முக்கியமானதொரு விடயம் என்பது இங்கு வலியுறுத்தப்பட்டது.

கொள்ளுப்பிட்டியிலிருந்து கடற்கரை வீதி ஊடாக, சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் சுற்றுலா வலயம் ஒன்றை நிறுவுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. தற்போது திட்டமிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் மூலம் சுமார் 2000 முதல் 3000 வரையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ். ஐ. எல். நசீர், வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நிலுஷி அபேவிக்ரம, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மல்காந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Related Articles

Latest Articles