மலையக மக்களுக்கு குடிசை அமைக்ககூட உரிமை இல்லை என்பதை நீலகாமம் சம்பவம் வெளிப்படுத்துகிறது

“நீலகாமம் தோட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப்பெற வேண்டும். மலையக மக்களுக்கு நில உரிமை வழங்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.”
– என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இரத்தினபுரி மாவட்டம், காவத்தை – நீலகாமம் தோட்டத்தில் கூலிக்காக அமர்த்தப்பட்ட காடையர்களால் தொழிலாளியின் குடியிருப்பு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த மூவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மலையக மக்களுக்கு தமக்கென சொந்த நிலம் இல்லை. சிறு நிலத்தில் குடிசையொன்றை அமைப்பதற்குகூட உரிமை இல்லை என்பதை நீலகாமம் தோட்ட சம்பவம் எடுத்துகாட்டுகின்றது.

மனித முன்னேற்றம், வளர்ச்சி பற்றி பேசுகின்றோம். ஆனால் 200 வருடங்களாக இந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பவர்களுக்கு இன்னும் காணி உரிமை இல்லை.

எனவே, அம்மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சொந்த நிலம் கிடைத்து வாழ்வதற்குரிய வழியை இந்த அரசாங்கமாவது ஏற்படுத்த வேண்டும்.’ – என்றார் சிறிதரன் எம்.பி.

Related Articles

Latest Articles