நல்லிணக்கத்தை வலுப்படுத்த ஹட்டனில் கையெழுத்து வேட்டை

கறுப்பு ஜூலையின்போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் ஏற்பட்ட வரலாற்றுக் காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஹட்டனில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய சகோதரத்துவ தினத்தை முன்னிட்டு, சோசலிச இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, ‘இனவாதம் வேண்டாம் – இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபடுவோம்’ என்ற தொனிப்பொருளில் இன்று 29 ம் திகதி ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள புத்தர் சிலை அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றது.

நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பத்தில் சர்வமதத் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

இதனைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் கலைச்செல்வி மற்றும் மஞ்சுல சுரவீர ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

பின்னர், பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர்.

இதனுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுல சுரவீர, கறுப்பு ஜூலையினால் நாட்டில் ஏற்பட்ட வடுவை போக்கி, மக்கள் மத்தியில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், பல தசாப்தங்களுக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற இன வன்முறைகளினால் அப்பாவி மக்களின் உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டதாகவும், அந்தச் சம்பவங்கள் இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத வடுவாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் கலைச்செல்வி, கடந்த காலங்களிலும் தற்போதும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை அரசியல் இலாபங்களுக்காக பிரித்து வைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்ற செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே இந்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கையின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த கால இன வன்முறைகளால் ஏற்பட்ட கசப்பான நினைவுகளை கடந்து, எதிர்காலத்தில் இன, மத பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் கலைச்செல்வி மற்றும் மஞ்சுல சுரவீர, ஹட்டன்-டிக்கோயா நகரசபைத் தலைவர் அசோக கருணாரத்ன உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

Latest Articles