மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம்

– முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை – மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் – இலங்கை ஜனாதிபதி

ஒவ்வொரு காலகட்டத்திலும் இலங்கை தனது நிலையான நட்புக்கரத்தை மாலைதீவை நோக்கி நீட்டியுள்ளது – மாலைதீவு ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவுக்கு (Dr Mohamed Muizzu) கௌரவம் அளிக்கும் வகையில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட விசேட இராப்போசன விருந்து உபசாரம் நேற்று (04) கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் நீண்டகால மற்றும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நெருக்கமான உறவு, ஜனாதிபதி முகமது முய்சு மற்றும் அவரது பாரியாரின் வருகையினால் மேலும் வலுவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தனித்துவமான அழகை ஒன்றிணைந்து ஊக்குவிக்க முடிந்தால், சுற்றுலாத்துறையின் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் பெரும் வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றும் மாலைதீவு மக்களுக்கிடையிலான பலமான உறவு மற்றும் கலாசாரப் பிணைப்பு பல நூற்றாண்டுகள் பழமையானது என்றும், இரு நாடுகளின் மொழிகளுக்கிடையே பொதுவான ஒற்றுமைகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்தப் பிணைப்பின் காரணமாக மாலைதீவும் இலங்கையும் எப்போதும் நெருங்கிய கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படும் நெருங்கிய நண்பர்களாக இன்று போலவே நாளையும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

1965 ஆம் ஆண்டில் மாலைதீவு குடியரசின் சுதந்திரப் பிரகடனம் கையெழுத்திடும் நிகழ்வை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்ததை பெருமையாகக் கருதுவதாகவும், அது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் நல்லுறவின் அடையாளமாகத் திகழ்வதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன் காரணமாகவே மாலைதீவு மக்கள் இலங்கையைத் தங்களது இரண்டாவது இல்லமாகக் கருதுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும், பிராந்திய அமைதி மற்றும் செழுமைக்கும் ஒன்றிணைந்து செயற்படுவதில் மாலைதீவை ஒரு நம்பிக்கைக்குரிய மற்றும் பெறுமதிமிக்க பங்காளியாகக் கருதுவதாகவும், உலகளாவிய ரீதியில் ஏற்படும் சூழல்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான தலையீடு இன்றியமையாதது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்து சமுத்திர அண்டை நாடுகள் என்ற ரீதியில், இரு நாடுகளின் பொதுவான விடயங்கள் ஒன்றோடொன்று ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடல் மட்டம் உயர்வு, காலநிலை மாற்றம், உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் போன்ற விடயங்கள் இரு நாடுகளையும் பொதுவாகப் பாதிப்பதாகவும், இவற்றை ஒற்றுமை மற்றும் கூட்டு இலக்குகளின் மூலம் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். எமது நாடு பாதிப்புக்குள்ளான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாலைதீவு ஒரு நெருங்கிய நண்பனாக வழங்கிய ஒத்துழைப்பைப் பாராட்டுவதுடன், அதனை நன்றியுடன் நினைவு கூர்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இரு நாட்டு மக்களின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் புதிய வழிகளைத் திறக்கும் என்றும், சகிப்புத்தன்மை, கருணை மற்றும் நிலைத்தன்மை ஆகிய நிலையான விழுமியங்களைப் பாதுகாத்து, இரு நாட்டு மக்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்க ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என மாலைதீவு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த ஜனாதிபதி, அவர்களின் வருகையானது இரு நாட்டு மக்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும் செழுமைக்கும் வழிவகுக்கும் என்று கூறினார்.

இதன்போது உரையாற்றிய மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு, மாலைதீவு வரலாற்றின் நீண்டகாலப் பங்காளியான இலங்கைக்கு வருகை தருவதில் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும், இந்த சந்தர்ப்பம் வெறும் இராஜதந்திரக் கொண்டாட்டம் மட்டுமல்லாது, இரு தீவு தேசங்களையும் இணைக்கும் பாரிய சமுத்திரத்தைப் போன்று மென்மையான மற்றும் ஆழமான நட்புறவின் கொண்டாட்டம் என்றும் குறிப்பிட்டார்.

பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளின் கடற்கரைகளுக்கு இடையே மோதும் அலைகள், வர்த்தகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளை விட மேலான ஒன்றைக் கொண்டு வந்ததாகக் குறிப்பிட்ட மாலைதீவு ஜனாதிபதி, அதன் மூலம் நம்பிக்கை, அன்பு மற்றும் போட்டியின்றி ஒத்துழைப்புடன் வாழக் கற்றுக்கொண்ட இரு தேசங்களின் போக்கை வெளிக்காட்டுகிறது என்றும் தெரிவித்தார். எளிமையான, உண்மையான மற்றும் நிலையான இந்த மனிதாபிமான தொடர்புகள் இரு தேசங்களையும் பிணைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு உண்மையான மரியாதையின் அடிப்படையில் அமைந்தது என்பதால், காலத்தால் ஏற்பட்ட சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாகவும், ஒவ்வொரு காலகட்டத்திலும் இலங்கை தனது நிலையான நட்புக்கரத்தை மாலைதீவை நோக்கி நீட்டியுள்ளதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். மாலைதீவை கட்டியெழுப்பியுள்ள அடித்தளத்தை வடிவமைப்பதற்கும் அதன் முன்னேற்றத்தைப் போஷிப்பதற்கும் இலங்கை வழங்கிய ஆதரவிற்கு மாலைதீவு மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு இங்கு சுட்டிக்காட்டினார்.

சமுத்திரத்தின் ஊடாக இலங்கை மற்றும் மாலைதீவுகள் பிரிக்கப்படவில்லை. மாறாக அது இரு நாடுகளையும் ஒன்றிணைக்கிறது என்றும், இந்தியப் பெருங்கடல் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் ஒரு சமுத்திரமாக இருப்பதை உறுதி செய்வதற்கு இரு நாடுகளிடமும் உள்ள மிகப்பெரிய பலம் அந்த ஒற்றுமையே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய உலகம் எதிர்கொள்ளும் சவால், காலநிலை மாற்றம் எனக் குறிப்பிட்ட மாலைதீவு ஜனாதிபதி, சிறிய நாடுகள் உயிர்வாழ்வதற்கும் முன்னேறுவதற்கும் உள்ள உரிமைக்காகவும், காலநிலை தொடர்பான நியாயத்திற்காகவும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். புத்தாக்கம், பின்னடைவுகளைத் தாங்கும் திறன் மற்றும் உலகளாவிய ஆலோசனை ஆகியவற்றின் ஊடாக இரு நாடுகளும் எதிர்கொள்ளும் அனைத்து அபாயங்களையும் ஒரு கூட்டான சக்தியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இரு நாடுகளின் இராஜதந்திர உறவுகளுக்கு அர்த்தம் கொடுப்பது இரு நாட்டு மக்களுமே என்றும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு தெரிவித்தார்.

எழுத்தறிவு, சுகாதார சேவைகள் மற்றும் மனித அபிவிருத்தி ஆகிய துறைகளில் இலங்கை அடைந்துள்ள சாதனைகள் மாலைதீவுக்கு நீண்டகாலமாக முன்மாதிரியாக இருந்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தை நோக்கும்போது, இளைஞர்களை வலுப்படுத்தும் மற்றும் இரு நாடுகளின் சமூகங்களையும் மேம்படுத்தும் கல்வி, பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கி, இந்த உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகக் கூறினார். அவ்வாறு வளர்க்கப்படும் ஒவ்வொரு மாணவரும், குணப்படுத்தப்படும் ஒவ்வொரு உயிரும் மற்றும் ஊக்குவிக்கப்படும் ஒவ்வொரு மனமும் மிகவும் அமைதியான மற்றும் வளமான பிராந்தியத்திற்கான முதலீடாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாலைதீவு – இலங்கை இடையிலான நட்புறவானது வெறும் அறிக்கைகளில் மாத்திரம் எழுதப்பட்ட ஒன்றல்ல. அது இரு நாடுகளினதும் கொடிகள், மொழிகள் மற்றும் உணவு முறைகள் குறித்து அறிந்து, வளரும் எமது பிள்ளைகளின் புன்னகையிலேயே உயிர்வாழ்கிறது என மாலைதீவு ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். தலைமுறை தலைமுறையாக இரு நாட்டுப் பிரஜைகளுக்கும் இடையில் பரிமாறப்படும் அந்த நெருக்கம் மற்றும் ஒரு தேசம் மற்றுமொரு தேசத்தின் வெற்றியைத் தமதாகக் கருதி கொண்டாடும் போது ஏற்படும் அமைதியான பெருமிதம் ஆகியவற்றிலேயே அந்தப் பிணைப்பு நிலைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான பிணைப்புகளை செயற்கையாக உருவாக்கிவிட முடியாது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவை உணரப்பட வேண்டியவை, அனுபவிக்கப்பட வேண்டியவை மற்றும் போற்றப்பட வேண்டியவை என்றும் வலியுறுத்தினார்.

இந்து சமுத்திரம் எங்கும் எதிரொலிக்கும் ஒரு உண்மை என்னவென்றால், ‘வானத்தின் எல்லை மிகப்பெரியது, ஆனால் அது எப்போதும் வானத்தையும் கடலையும் ஒன்றிணைக்கின்றது’ என்று குறிப்பிட்ட மாலைதீவு ஜனாதிபதி, மாலைதீவு – இலங்கை இடையிலான நட்புறவும் மிக நீண்ட தூரம் பரந்து விரிந்தது என்றாலும், அது எப்போதும் பொதுவான நோக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை உள்ள இடத்தில் ஒன்றிணைகிறது என்று தெரிவித்தார்.

இரு நாடுகளின் கடந்த காலத்தைப் பற்றிய நன்றியுணர்வுடனும், நிகழ்காலம் குறித்த நம்பிக்கையுடனும், இரு நாடுகளுக்கும் பொதுவான எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புடனும் இந்த எல்லையை நோக்கி ஒன்றிணைந்து பயணிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார். அத்துடன், மாலைதீவு மற்றும் இலங்கை இடையே நிலவும் நெருக்கமான நட்புறவும் ஒத்துழைப்பும் எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறட்டும் என்று வாழ்த்துத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாலைதீவு ஜனாதிபதி சிறப்பு குறிப்பு ஒன்றை பதிவிட்டதோடு, நாட்டுத் தலைவர்களும் நினைவுப் புத்தகத்திலும் அவர் கையொப்பமிட்டார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாநாயக்கார, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன்,

மாலைதீவு தூதுக்குழுவின் சார்பில் அந்நாட்டின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இர்திஷாம் ஆதம் (Iruthisham Adam), பொருளாதார அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் வர்த்தக அமைச்சர் முகமது சயீத் (Mohamed Saeed), மீன்பிடி, விவசாயம் மற்றும் கடல்வள அமைச்சர் அஹ்மட் ஷியாம் (Ahmed Shiyam), ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அப்துல்லா பயாஸ் (Abdulla Fayaz), வெளிநாட்டு உறவுகள் தொடர்பான ஜனாதிபதியின் முதன்மைச் செயலாளர் முகமது நசீர் (Mohamed Naseer),

அரசாங்கத்தின் முக்கிய பேச்சாளர் முகமது ஹுசைன் ஷரீப் (Mohamed Hussain Shareef), இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (Masood Imad), வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரும் புரோடகோல் அதிகாரியுமான முகமது ஷஹுதி (Mohamed Shahudy), ஜனாதிபதி பாரியாரின் சமூகச் செயலாளர் கதீஜா நஷ்வா (Khadeeja Nashwa), ஜனாதிபதியின் பிரதி உப செயலாளர் முகமது ஹசான் (Mohamed Hassaan) உள்ளிட்ட மாலைதீவு இராஜதந்திர தூதுக்குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles