“புலிகளுடனேயே எமக்கு பிரச்சினை இருந்தது. தமிழ் மக்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட்டுவருகின்றோம். எமக்கு தமிழ் உறவினர்களும் உள்ளனர்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
” நாட்டில் போர் முடிவடைந்திருந்தாலும், போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்களை பழிவாங்க வேண்டும் என்ற பிரிவினைவாத சிந்தாந்தம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை.
போர் நிறைவுக்கு வந்த நாளை நாம் நினைவுகூரினாலும் இதற்கு பங்களிப்பு செய்த படையினர் சிறையில் உள்ளனர். புலி ஆதரவாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே இவ்வாறான நடவடிக்கை இடம்பெறுகின்றது.
புலனாய்வு பிரிவு பிரதானிகூட சிறையில் உள்ளார். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான கோப்புகளை ஒளித்தவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதான் ஜே.வி.பி. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலாகும்.
நாம் தமிழர்களுடன் போரிடவில்லை என்பதை புலி ஆதரவு தமிழ் டயஸ்போராக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களுடன் நாம் ஒத்துழைப்புடன் செயல்பட்டுவருகின்றோம். சகோதரத்துடன் பழகுகின்றோம்.
புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அந்த அமைப்புடன் எமக்கு பிரச்சினை இருந்தது. அவ்வமைப்புக்கு எதிராகவே நாம் போர் செய்தோம்.” – என்றார் நாமல் ராஜபக்ச.










