தலவாக்கலை பி.கேதீஸ்
மலையக பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு நில உரிமை கோரி, ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அரசாங்கத் திணைக்களங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 11 வயது சிறுவன் ஒருவர் இன்று (20) காலை தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு தனது நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.
லிந்துலை, மௌசாக்கலைச் தோட்டத்தைச் சேர்ந்த பிரேம்ராஜ் கார்த்தி என்ற 11 வயது சிறுவன், தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு மிகக் குறைந்த நேரத்தில் பயணம் செய்து சாதனை படைக்கும் நோக்கத்தில் இந்த நடைப்பயணத்தைத் தொடங்கினார்.
மலையக பெருந்தோட்டங்களில் வசிக்கும் மலையக மக்களுக்கு நில உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது மகன் நன்றாக நடந்து செல்வார் என்றும், இதற்கு முன்பும் நடந்து பல சாதனைகளைப் படைத்துள்ளார் என்றும் மலையக மக்கள் இந்த நாட்டிற்கு வந்து சுமார் 200 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அவர்கள் இன்றும் லயன் அறைகளிலேயே வாழ்கின்றனர் என்றும் அச்சிறுவனின் தந்தை சுப்பிரமணியம் பிரேம்ராஜ் தெரிவித்தார்.
மக்களால் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத நில உரிமைப் பிரச்சினைக்கு அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதும், தலவாக்கலையிலிருந்து கொழும்புக்குக் குறுகிய நேரத்தில் நடந்து சென்று சாதனை படைப்பதுமே இந்தப் பேரணியின் நோக்கங்களாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சிறுவன் தனது நடைப்பயணத்தைத் தொடங்குவதைக் காண தலவாக்கலையில் அதிகளவான மக்கள் கூட்டம் கூடியதை அவதானிக்க முடிந்தது. மேலும், தலவாக்கலை நகர மக்கள் கேக் வெட்டி, சிறுவனின் உறுதியான நடைப் பயணத்தைப் பாராட்டினர்.










