மக்களின் நிலைப்பாட்டை அறிவதற்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு ,
“ மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படாது என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். இது அவரின் தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சரி. ஆனால் அரசாங்கத்தின் முடிவாக இருந்தால் அது ஜனநாயகத்துக்கு முரணான செயலாகும்.
தேர்தல் தொடர்பில் எவரும் கருத்து கூறலாம். ஆனால் முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கே உள்ளது.
அந்தவகையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. இதற்கமைய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையும்கூட.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிகாலத்தில் உள்ளாட்சிசபைத் தேர்தல் தொடர்பில் கேள்வி எழுப்பியவர்கள், இன்று மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஏன் கேள்வி எழுப்புவதில்லை?
ஜனாதிபதிக்கே தமது அரசாங்கம்மீது இன்று நம்பிக்கை உள்ளதா என்பது தெரியாது. எனவே, மக்களின் நிலைப்பாட்டை அறிய மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும்.” – என்றார் ஜீவன் தொண்டமான்.










