“ஜனாதிபதியின் பிரதிநிதி அல்ல (ஆளுநர்), மக்கள் பிரதிநிதிகளே எமக்கு வேண்டும். எனவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர். அடாவடி நிர்வாகம் முன்னெடுக்கப்படுகின்றது.
நீலகாமத்தில் குண்டர் குழு வந்து தாக்கியது. உடபுசல்லாவை, வெளிமடை, ராகலை போன்ற பகுதிகளிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
மக்கள் பிரதிநிதிகள் செய்யும் வேலையை, அவர்களின் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு ஆளுநரால் செய்ய முடியாதுதானே?
எமது தொழிலாளர்களை பாதுகாத்துக்கொள்வதற்கு எமக்கு மாகாணசபை முறைமை அவசியம். தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
எங்களுக்கு இரண்டு ஸ்டைலும் தெரியும். ஜனநாயக வழியில் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த மொழி புரியாவிட்டால், இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாமல்போகும்.
அதேவேளை, தோட்ட நிர்வாக தரப்பு சட்டத்தை கையில் எடுத்துள்ளது. காட்டாட்சியே தோட்டப்பகுதிகளில் நிலவுகின்றது. இதற்கு முடிவு கட்டுவதற்கும் மாகாணசபைத் தேர்தல் அவசியம்.” – என்றார் வடிவேல் சுரேஷ்.










