ஆஸ்திரியாவுக்கு எதிரான லீக் போட்டியில் , அர்ஜென்டினா அணியின் தொடக்க கோலை அடித்ததன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.
6 உலகக் கோப்பை தொடர்களில் அவரது இதுவரை அவர் 18 கோல்களை அடித்துள்ளார்.
திங்கட்கிழமை நடைபெற்ற இரண்டாவது குரூப் போட்டியில், ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த கோல் மூலம் அவர் இந்த வரலாற்றுப் பட்டியலின் முதலிடத்தைப் பிடித்தார்.
அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, கூடுதல் நேரத்தில் (stoppage time) அவர் அடித்த மற்றொரு கோலின் மூலம், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவினருக்குமான FIFA உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதற்கு முன் 17 கோல்களுடன் முதலிடத்தில் இருந்த பிரேசிலின் வீராங்கனை மார்த்தாவின் (Marta) சாதனையை மெஸ்ஸி முறியடித்தார்.
கடந்த வாரம் வட அமெரிக்காவில் தொடங்கிய இந்த உலகக் கோப்பை தொடரின் அர்ஜென்டினாவின் முதல் போட்டியில், அல்ஜீரியாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றபோது மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்திருந்தார்.
அதன்மூலம் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் (Miroslav Klose) 16 உலகக் கோப்பை கோல்கள் என்ற சாதனையை அவர் சமன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
38 வயதான மெஸ்ஸி, இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் ஒரு பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டிருந்தார்.
2006-ல் தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய மெஸ்ஸிக்கு இது 6-வது உலகக் கோப்பை தொடராகும். தற்போது அவர் தனது நாட்டுக்காக 201 போட்டிகளில் விளையாடி 121 கோல்களை அடித்துள்ளார்.
தொடர்ச்சியாக ஆறு உலகக் கோப்பை தொடர்களில் தனது நாட்டுக்காக கோல் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் அர்ஜென்டினா அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறலாம். மேலும், திங்கட்கிழமை நடக்கும் மற்றொரு போட்டியில் அல்ஜீரியாவை ஜோர்டான் அணி தோற்கடிக்கத் தவறினால், அர்ஜென்டினா குரூப் ‘ஜே’ பிரிவில் முதலிடத்தைப் பிடிப்பது உறுதியாகும்.
