தென் ஆப்பிரிக்க அணி, தென் கொரியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி, வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கோப்பையின் நாக்-அவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு தாங்கள் நடத்திய உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, முதன்முறையாக உலகக் கோப்பையில் களம் கண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி , ‘குரூப் ஏ’ பிரிவின் முதலிடம் பிடித்த மெக்சிகோவிடம் 2-0 என தோற்றது.
இதனால் இந்தத் தொடரிலிருந்து அவர்கள் விரைவில் வெளியேறிவிடுவார்கள் என்றே பலராலும் கணிக்கப்பட்டது.
ஆனால், அதன்பின் செக் குடியரசுக்கு எதிரான ஆட்டத்தைக் கடின போராட்டத்திற்குப் பின் சமன் செய்த அவர்கள், மான்டேரியில் (Monterrey) தென் கொரியாவுக்கு எதிராக நடைபெற்ற வாழ்வா-சாவா போட்டியில் தபெலோ மாசெகோ (Thapelo Maseko) இரண்டாம் பாதியில் அடித்த கோல் மூலம் வெற்றி பெற்று, குழுவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தினர்.
ஆசியாவின் மிகச்சிறந்த கால்பந்து வீரராகக் கருதப்படும் கேப்டன் சன் ஹியுங்-மினை (Son Heung-min) தென் கொரிய பயிற்சியாளர் ஹாங் மியுங்-போ தொடக்க வீரர்களின் பட்டியலில் சேர்க்காமல் வெளியே அமர வைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் தென் கொரியா வலுவாக விளையாடியது. மாற்று கேப்டன் கிம் மின்-ஜே (Kim Min-jae) அடித்த சக்திவாய்ந்த ஹெடர் (Header) கோலை, தென் ஆப்பிரிக்காவின் ஆப்ரி மோடிபா (Aubrey Modiba) கோல் லைனிலேயே தடுத்து நிறுத்தினார்.
தொடர்ந்து லீ காங்-இன் (Lee Kang-in) அடித்த ஷாட்டும் கோல் போஸ்ட்டிற்கு வெளியே சென்றது.
மந்தமான தொடக்கத்திற்குப் பின் சுதாரித்துக் கொண்ட தென் ஆப்பிரிக்கா, ஆக்ரோஷமாகவும் துடிப்பாகவும் விளையாடியது.
ஆனால், கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை அவர்கள் வீணடித்தனர்.
ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில், தென் கொரிய கோல்கீப்பர் கிம் சியுங்-க்யு தடுத்த பந்து எவிடென்ஸ் மாகோபாவிடம் (Evidence Makgopa) கிடைத்தது.
ஆனால், மிக அருகிலிருந்து அவர் அடித்த எளிய ஷாட்டை கோல்கீப்பர் எளிதாகத் தடுத்தார்.
இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே ஆட்டத்தின் போக்கை மாற்ற பயிற்சியாளர் ஹாங், கேப்டன் சன் ஹியுங்-மின் உள்ளிட்ட மூன்று மாற்று வீரர்களைக் களமிறக்கினார்.
மறுபுறம் மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற போட்டியில் செக் குடியரசுக்கு எதிராக மெக்சிகோ முன்னிலை வகிப்பதாகத் தகவல் வந்ததால், இரு அணிகளுக்குமே எப்படியாவது கோல் அடிக்க வேண்டும் என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது.
ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு அந்தத் தங்கமான வாய்ப்பு கிடைத்தது.
ஷெபாங் மொரேமி (Tshepang Moremi) கொடுத்த கிராஸ் பாஸைப் பெற்ற மாசெகோ, இந்த முறை எவ்வித பதற்றமும் இன்றி பந்தை நேர்த்தியாக கோல் போஸ்ட்டிற்குள் செலுத்தி தென் ஆப்பிரிக்காவிற்கு முன்னிலை தேடித்தந்தார்.
ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் தென் கொரியா ஸ்கோரைச் சமன் செய்யக் கடுமையாகப் போராடியும் பலன் கடைக்கவில்லை.
இதனால், ஜூன் 28-ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள அடுத்த சுற்று ஆட்டத்தில், தொடரை நடத்தும் மற்றொரு நாடான கனடாவை தென் ஆப்பிரிக்கா எதிர்கொள்கிறது.
‘குரூப் ஏ’ பிரிவில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற மெக்சிகோ ஒன்பது புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
