சிறைச்சாலை மோதல்: ரூ.10 கோடிக்கு மேல் இழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் மோதலால், சொத்துகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கைதிகள் சிறைச்சாலையின் தொலைக்காட்சி அமைப்பு, மருந்து களஞ்சியம், உடல் ஸ்கேனர் இயந்திரம் (Body scanner), சிசிடிவி (CCTV) கட்டமைப்பு, அலுவலகங்கள் மற்றும் முக்கிய களஞ்சிய அறை உள்ளிட்ட பல முக்கிய இடங்களை அடித்து நொறுக்கி நாசப்படுத்தியுள்ளனர்.

இவற்றின் மதிப்பு 10 கோடி ரூபாய்க்கும் அதிகம் என சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

(இது உத்தேச மதிப்பீடு மாத்திரமே, இந்த வன்முறைச் சம்பவத்தால் சொத்துகள், கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதம் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. இன்னும் அது பற்றிய அதிகாரப்பூர்வ மதிப்பீடு இடம்பெறவில்லை.)

கைதிகளை வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்காக சிறைச்சாலை பேருந்துகளில் ஏற்றப்பட்ட பின்னரும், ஒரு குழுவினர் பேருந்திற்குள்ளும் வன்முறையாகவும் பதற்றமாகவும் நடந்துகொண்டதால், அவர்களை மீண்டும் வேறு பேருந்துகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்திற்குக் காரணமானவராகக் கருதப்படும் பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கெஹெல்பெத்தர பத்மே’ என்பவரின் நெருங்கிய கூட்டாளி உட்பட 13 ஆபத்தான கைதிகளும், 55 சாதாரண கைதிகளும் நேற்று முன்தினம் (6ஆம் திகதி) இரவு பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலை வெறுமையாக்கப்படவுள்ளது. அங்கு உள்ள எஞ்சிய 500 பேரை காலி பகுதியில் உள்ள இடமொன்றுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 7 சிறைச்சாலை அதிகாரிகள், 20 கைதிகள் உட்பட இதுவரை மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles