மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் பிரேமா பிரிவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இப்பகுதியில் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள், இது குறித்து உடனடியாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமாரவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
பொலிஸ் பொறுப்பதிகாரியின் உத்தரவிற்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, சடலமாக மீட்கப்பட்டவர் மஸ்கெலியா நகரின் பேருந்து நிலைய வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய பரமேஸ்வரன் ஆனந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு ஹட்டன் பொலிஸ் பிரிவின் குற்றத்தடயவியல் கைரேகை நிபுணர்கள் (SOCO) வரவழைக்கப்பட்டு தடையவியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவானின் நேரில் வந்து பார்வையிட்ட பின்னர், சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை (Post-mortem) மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னரே சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
