“தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமத்தின் பின்னணியில் அரசாங்கம் இல்லை.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்றது.
இதன்போது தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவின் பின்னணியில் அரசாங்கம் உள்ளதா என கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார்.
“ எதிரணிகளின் ஒன்றிணைவு பற்றி எதிர்க்கட்சி தலைவரிடம்தான் கேட்க வேண்டும். ஆளுங்கட்சியிடம் பிரச்சினையென்றால் என்னிடம் கேளுங்கள். எதிரணிகளை இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டியது எதிர்க்கட்சி தலைவரின் பொறுப்பு.
எங்கள் பக்கம் 159 எம்.பிக்கள் உள்ளனர். அவர்களுடன் நாம் பயணிக்கின்றோம். எனவே, புதிய கூட்டணிகளை உருவாக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு கிடையாது.” எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளின் ஓர் அங்கமாக பொது கட்டமைப்பின்கீழ் செயல்படுவதற்கு ஆறு பிரதான தமிழ் பேசும் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவே இவ்வாறு சங்கமித்துள்ளன.
புதிய அரசமைப்பு உருவாக்கம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அழுத்தம் மற்றும் காணி உரிமைக்காகக் குரல் கொடுத்தல் உள்ளிட்ட பிரதான விடயங்களில் ஒருங்கிணைந்து செயல்படவே தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்நிலையில் இக்கூட்டணி தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று கேள்விகள் எழுப்பட்டன.










