செம்மணியில் இன்று மேலும் 09 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை, கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் மனித என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாள்கள் மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அகழ்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கமைய இன்று இந்தப் பகுதியில் ஒன்பது என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 6 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை அகழ்வுப் பணியின் போது, வித்தியாசமான நிலையில் மண்டையோடு ஒன்று அடையாளம் காணப்பட்டது. அதனைச் சுத்தப்படுத்தும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட போதே, மேற்படி நபர் கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது. இந்த என்புக்கூட்டை முழுமையாக அகழ்ந்து எடுக்கும் பணிகள் நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி, இதே போன்ற நிலையில் மற்றுமொரு என்புக்கூடு கண்டெடுக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், செம்மணி புதைகுழியிலிருந்து கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் கண்டெடுக்கப்படும் இரண்டாவது என்புக்கூடு இதுவாகும்.

மேலும், நேற்று அடையாளம் காணப்பட்ட ஒரு பெரியவரின் என்புக்கூடு மற்றும் சிறியவரின் என்புக்கூடு ஆகியவற்றையும் சுத்தப்படுத்தும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. அவற்றையும் நாளை அகழ்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 91 நாள்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரையில் 446 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 434 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles