” வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுகின்றது. இது தனிநபர் எவரையும் இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கை அல்ல” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அத்துடன், எதிர்க்கட்சியினரே நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:
“பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பான சம்பவத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் கருத்து வெளியிடுவாரெனில், அதுவே நீதித்துறையின் சுயாதீனத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.
நாடாளுமன்ற சிறப்புரிமைக்கு பின்னால் ஒளிந்துகொண்டு, இதற்கு முன்னரும் நீதிபதிகள் தொடர்பில் மக்களிடையே நம்பிக்கையீனத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதுவே நீதித்துறையின் சுயாதீனத்திற்கு விடுக்கப்படும் உண்மையான அழுத்தமாகும்.
நீதிமன்றத்தின் மீது மக்களுக்குத் தெளிவான நம்பிக்கை உள்ளது. வழக்குகளை எதிர்கொண்டுள்ளவர்களும், பிணையில் வெளியில் உள்ளவர்களுமே நீதிமன்றத்தின் சுயாதீனம் பற்றிப் பேசி வருகின்றனர்.
உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் தற்போது நிலவும் வெற்றிடங்கள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும். அத்துடன் நீதிமன்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது. தற்போதுள்ள அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த இரண்டு ஆண்டுகள் சேவை நீடிப்பை வழங்கத் திட்டமிடப்படுகின்றது.
கடந்த காலங்களைப் போலத் தனிநபர்களை இலக்கு வைத்து அல்லாமல், தேங்கிக் கிடக்கும் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுகின்றது” என்றார்
