இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு கடந்த ஜூன் மாதத்தில் 17,592 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ.277 அதிகரிப்பாகும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் குறைந்தபட்சம் தேவைப்படும் தொகையையே உத்தியோகபூர்வ வறுமைக் கோடு குறிக்கிறது. குறைந்தபட்ச உணவு மற்றும் உணவு அல்லாத அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவுகளை அடிப்படையாகக் கொண்டு இது கணக்கிடப்படுவதுடன், விலை மாற்றங்களுக்கு ஏற்ப மாதந்தோறும் புதுப்பிக்கப்படுகிறது.
ஜூன் மாதத் தரவுகளின்படி மாவட்டங்களுக்கு இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன. மாவட்டங்களில் அதிகபட்சமாக கொழும்பில் வறுமைக் கோடு 18,973 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்ததாக கம்பஹாவில் 18,876 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மிகக் குறைந்த வறுமைக் கோடு மொனராகலை மாவட்டத்தில் 16,821 ரூபாயாக பதிவாகியுள்ளது.
உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குடும்பங்களின் செலவுகளை தொடர்ந்து பாதித்து வரும் நிலையிலேயே தேசிய வறுமைக் கோடும் அதிகரித்துள்ளது.
இலங்கையின் வாழ்க்கைத் தரம், வறுமை நிலை மற்றும் வாழ்க்கைச் செலவில் ஏற்படும் மாற்றங்களை மதிப்பிடுவதற்காக கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் முக்கியமான குறியீடுகளில் ஒன்றாக உத்தியோகபூர்வ வறுமைக் கோடு விளங்குகிறது.
