பதுளை போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக சுமார் ரூ.11,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரப் பிரதியமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.
பதுளை போதனா வைத்தியசாலையில் நேற்று (12) நடைபெற்ற வைத்தியசாலை முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார், அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்;
வைத்தியசாலையின் நோயாளர் பராமரிப்பு சேவைகளை மேலும் வலுப்படுத்துதல், மனித மற்றும் பௌதிக வளங்களை மேம்படுத்துதல், நிலவும் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வுகளை வழங்குதல் மற்றும் தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளோம்.
வைத்தியசாலையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்காக Triple Energy LINAC இயந்திரம் நிறுவப்பட்டுள்ள நிலையில், அதனைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், காலாவதியான Cobalt-60 இயந்திரத்திற்குப் பதிலாக Single Energy LINAC இயந்திரத்தை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன், வைத்தியசாலையின் Cardiac Catheterization Laboratory (Cath Lab) திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், உபகரணங்களை நிறுவுதல், மின்சார வசதி மற்றும் தேவையான மனித வளங்களைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்தவும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண மக்களுக்கு முதலாம் நிலை சுகாதார சேவையை வழங்கும் பிரதான வைத்தியசாலையாக பதுளை போதனா வைத்தியசாலை விளங்குகிறது என்றார்.
பதுளை போதனா வைத்தியசாலை 09 ஏக்கர் பரப்பளவில் 1,562 படுக்கைகள், 43 விடுதிகள், 65 விசேட பிரிவுகள் மற்றும் 12 சத்திரசிகிச்சை அறைகளைக் கொண்டுள்ளது.
வருடாந்தம் சுமார் 592,000 பேர் கிளினிக் சேவைகளையும் 371,000 பேர் வெளிநோயாளர் சேவைகளையும் பெற்றுவருகின்றனர் என வைத்தியசாலை தரப்பில் கலந்துரையாடலின் போது தகவல்கள் முன்வைக்கப்பட்டன.










