இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வர்த்தகச் சலுகையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலேயே இந்த அபாயம் எழுந்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பின் பின்னர், மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அறிவிக்கப்பட்டது.
இலங்கை தொடர்பாக 2023 முதல் 2025 வரையான காலப்பகுதியை உள்ளடக்கி ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அண்மைய GSP+ மீளாய்வு அறிக்கையிலும் மரண தண்டனை தொடர்பான விடயம் விசேடமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1976ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படாத போதிலும், நீதிமன்றங்கள் தொடர்ந்தும் மரண தண்டனைத் தீர்ப்புகளை வழங்கி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 செப்டெம்பர் மாத நிலவரப்படி இலங்கையில் 817 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக நீதியமைச்சின் தரவுகளை மேற்கோள்காட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
GSP+ என்பது மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் உள்ளிட்ட 27 சர்வதேச உடன்படிக்கைகளை அங்கீகரித்து நடைமுறைப்படுத்தும் தகுதியுள்ள வளர்ந்து வரும் நாடுகளுக்கு, பெரும்பாலான பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு சுங்கவரி இன்றி ஏற்றுமதி செய்ய வாய்ப்பளிக்கும் விசேட வர்த்தகச் சலுகையாகும். இலங்கையும் இந்தத் திட்டத்தின் பயனாளியாக இருந்து வருகிறது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழலில் இந்தச் சலுகையை இழப்பது ஏற்றுமதித் துறைக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகளின்படி, இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதிகளின் பெறுமதி 2022ஆம் ஆண்டில் 3.2 பில்லியன் யூரோக்களாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 2.6 பில்லியன் யூரோக்களாக குறைந்துள்ளது.
GSP+ சலுகைக்குத் தகுதியான இலங்கைப் பொருட்களின் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதி பெறுமதியும் 2022ஆம் ஆண்டில் 2.7 பில்லியன் யூரோக்களிலிருந்து, 2023ஆம் ஆண்டில் 2.2 பில்லியன் யூரோக்களாகக் குறைந்ததுடன், 2024ஆம் ஆண்டிலும் அதே மட்டத்தில் இருந்துள்ளது.
இதற்கிடையில், GSP+ திட்டத்திற்கான புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரவுள்ளன. இலங்கை உள்ளிட்ட தற்போதைய பயனாளி நாடுகள், திருத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ் தகுதி பெறுவதற்காக 2028 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும்.
இந்த நிலையில், மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம், மனித உரிமைகளை முக்கிய நிபந்தனையாகக் கொண்டுள்ள GSP+ சலுகையை இலங்கை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற புதிய கேள்வியை எழுப்பியுள்ளது.










