Air India விமான நிறுவனம் தனது அனைத்து விமானிகளையும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் விமானப் பணியில் பயன்படுத்த அனுமதிக்கப்படாத மருந்துகளுக்கான பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமுலுக்கு வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி Phuket இலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த Air India விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென சுமார் 300 அடி உயரத்தை இழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உட்பட 17 பேர் காயமடைந்தனர்.
குறித்த விமானத்தின் சிரேஷ்ட விமானி போதைப்பொருள் பரிசோதனையை மீண்டும் மேற்கொள்ள வேண்டியிருந்ததாக ஆரம்பகட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஊடக அறிக்கைகளின்படி, அவர் மரிஜுவானா தொடர்பான பரிசோதனையில் நேர்மறையான முடிவைப் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. எனினும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் தொடர்கின்றன.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட விமானத்தின் இரண்டு விமானிகளும் விசாரணை நிறைவடையும் வரை பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இந்திய அதிகாரிகள், விமான தயாரிப்பு நிறுவனமான Airbus மற்றும் பிரான்ஸின் விமானப் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய விதிமுறைகளின்படி குறைந்தது 10 வீதமான விமானிகள் சீரற்ற முறையில் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் பயணிகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இந்த விதிமுறையைத் தாண்டிச் சென்று அனைத்து விமானிகளையும் பரிசோதிக்க Air India தீர்மானித்துள்ளது.
Air India-வின் குறைந்த கட்டண விமான சேவையான Air India Express விமானிகளும் இந்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் தொழில்முறை தரத்தில் உயர்ந்த நிலையைப் பேணுவதுடன், பயணிகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என Air India தெரிவித்துள்ளது.
Air India ஏற்கனவே விமானப் பாதுகாப்பு தொடர்பான கடுமையான கண்காணிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளியான அறிவிப்பு சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் கவனத்தை ஈர்த்துள்ளது.










