ஈரான்மீதான போர் அதன் தொடக்க இலக்குகளை அடையத் தவறிவிட்டது என்றும், மாறாக அது அந்நாட்டின் தீவிரப் போக்காளர்களை பலப்படுத்த மட்டுமே உதவியுள்ளது என்றும் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே (Espen Barth Eide) தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தப் போர் தனது தொடக்க நோக்கங்கள் எதையுமே அடையவில்லை என்பது மிகத் தெளிவாக புரிகின்றது. மேலும், இதன் மூலம் ஈரானின் தீவிரப் போக்காளர்கள் பலவீனமடைவதற்குப் பதிலாக மேலும் பலமடைந்துள்ளனர்.
தொடக்கம் முதலே நோர்வே இந்தப் போரை எதிர்த்து வந்ததாகக் குறிப்பிட்ட Espen Barth Eide, இந்தப் போர் புத்திசாலித்தனமான ஒன்றும் அல்ல; சர்வதேச சட்டத்திற்குட்பட்டதும் அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்களின் இந்த நிலைப்பாடு தற்போது உலக அளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதும் தற்போதைய முக்கியத் தேவையாகும் என்று சுட்டிக்காட்டிய அவர், “இது சாத்தியமானது தான்” என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
