நாடாளுமன்றத்தில் இருந்து தாம் விடைபெறுவதாகவும், இதுவே தனது இறுதி உரை என்றும் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
“இது எனது இறுதி உரையாகும். நான் யாருக்காவது எப்போதாவது தவறு செய்துள்ளேனா? நான் எனது மக்களை நேசிக்கின்றேன். சிங்கள மக்களுக்கும் நான் ஆதரவானவன். இறுதியாக நான் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையும் முஸ்லிம் மக்களுக்கானதே ஆகும்.
இந்த நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் மனங்கள் நோகும்படி பேசியிருந்தால் அதற்காக மனம் வருந்துகின்றேன்; மன்னிப்பும் கோருகின்றேன்.
நான் யாருடனும் ‘டீல்’ போடவில்லை. எனது தரப்பு நியாயத்தையே பேசினேன். நான் சென்ற பின்னர் ‘அர்ச்சுனா எங்கே’ என்று தேட வேண்டாம்.
2029 ஆம் ஆண்டிலோ அல்லது அதற்குப் பின்னரோ நான் மீண்டும் வரலாம்; தேசியப் பட்டியலிலாவது வரலாம். இங்கு நான் ஏதேனும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.
நான் தமிழன் என்று தைரியமாகக் கூறுவேன்; அதேவேளை சிங்களவர்களையும் கட்டியணைப்பேன். என்னிடம் இனவாதம் இல்லை. என் மக்களுக்காகவே குரல் கொடுத்தேன். எனக்கு எதிராகப் பல வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக நான் அரசாங்கத்திடம் அடிபணியப் போவதில்லை.
2029 ஆம் ஆண்டு நான் தேர்தலில் போட்டியிடும் பகுதியில் தேசிய மக்கள் சக்தியினர் எவரேனும் போட்டியிட்டால், மக்கள் அவர்களை அடித்து விரட்டுவார்கள். சென்று வருகிறேன்” எனத் தெரிவித்தார்.
