தோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்

கொட்டகலை தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட கிரேக்லி (Craiglea) தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட தோட்ட முகாமையாளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.

தோட்ட நிர்வாகத்தின் தன்னிச்சையான தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொழிலாளர்கள் கிரேக்லி தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தோட்டத்தில் மரங்களை வெட்டி விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியைத் தமக்கு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமையே இந்தப் போராட்டத்திற்குக் பிரதான காரணமென தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பணத்தை வழங்காமலும், தொழிலாளர்கள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காணாமலும் தோட்ட முகாமையாளர் இரகசியமாக இடமாற்றம் பெற்றுச் செல்ல ஆயத்தமாவதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும், மரங்களை ஏற்றிச் செல்வதற்காக வந்த கனரக வாகனங்களால் தோட்டத்திற்கான பிரதான வீதி கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், அதனைப் புனரமைத்துத் தருவதாகத் தோட்ட அதிகாரி அளித்த வாக்குறுதியையும் மீறியுள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகத் தொழிலாளர்கள் திம்புள்ள-பத்தனை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோதிலும், ஹட்டன் தொழிலாளர் அலுவலகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துமாறு தோட்ட அதிகாரி உள்ளிட்ட நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

எனினும், அந்த யோசனையை நிராகரித்த தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று (02) ஆம் திகதி திம்புள்ள-பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வருகை தந்து நிலைமையைச் சீர்செய்ய முயன்ற போதிலும், தமது முறைப்பாடுகளைப் பொலிஸார் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகக் குற்றம் சுமத்தி தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தனர்.

Related Articles

Latest Articles