கஞ்சா கலந்த மதன மோதக பக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததாகக் சந்தேகிக்கப்படும் 40 வயதுடைய நபர் ஒருவர், 750 மதன மோதக பக்கெட்டுகளுடன் இன்று (3) பசறை நகருக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் செவனகல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை நகருக்கு அருகில், பசறை பிரதேச சபைக்கு அருகிலுள்ள ஆயுர்வேத மருந்தகமொன்றில் வைத்து குறித்த மதன மோதக பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
அவற்றின் மொத்த பெறுமதி சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் (ரூ. 200,000) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு, இந்த கஞ்சா கலந்த மதன மோதக பாக்கெட்டுகள் நீண்டகாலமாக ரூ. 250 முதல் ரூ. 300 வரையான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ரத்னசிறி பண்டார அவர்களின் ஆலோசனையின் பேரில், பசறை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
த.டிமேஷன்










