ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவிற்கும் இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
மலையக இந்து குருக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மலையகப் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களின் நிர்வாக நடவடிக்கைகள், அறநெறிப் பாடசாலைகளை நடத்திச் செல்லல், குருமார்களின் தேவைகள், அத்துடன் ஆலய காணிகள் மற்றும் மதத் தலங்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இலங்கை மலையக இந்து குருமார்கள் ஒன்றியத்தினால் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மலையக இந்து குருமார்கள் வாழும் பகுதிகளிலுள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கள் உள்ளிட்ட இந்து குருமார் ஒன்றியத்தின் மதத் தலைவர்கள், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) கே.பி. யோகசந்திர, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம் மற்றும் பொலிஸ்) எம்.எஸ்.பி. சூரியப்பெரும, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. நிஹால், இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை. அனிருத்தனன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
