அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, ஏமனின் முக்கிய துறைமுக நகரமான மோகாவை (Mocha) ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் வியாழக்கிழமை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அத்துடன் செங்கடல் கடற்கரை வழியாக மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளை நோக்கியும் அவர்கள் முன்னேறியுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் மிக முக்கியமான கடல் வழிகளில் ஒன்றான பாப் அல்-மந்தேப் (Bab el-Mandeb) ஜலசந்தியிலும், அதனை ஒட்டியுள்ள ஹனிஷ் (Hanish) தீவுகளிலும் ஹவுதிக்கள் தமது பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக ஏமன் அரசாங்க இராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சவூதி அரேபியக் கப்பல்களைத் தவிர ஏனைய அனைத்து நிறுவனங்களின் கப்பல் போக்குவரத்திற்கும் செங்கடல் பாதை பாதுகாப்பானது என ஹவுதி அமைப்பின் மனிதநேய நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா, ஈரானிய மோதலால் ஹோர்முஸ் ஜலசந்தி முடங்கியதை அடுத்து, இச்செங்கடல் பாதையையே பெரிதும் நம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமது தாக்குதல்கள் தற்காப்பு நடவடிக்கைகளே என்றும், ஏமன் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் இவை நிறுத்தப்படும் என்றும் ஹவுதி செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல்சலாம் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது கடல்வழி முடக்கம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு
ஹோர்முஸ் ஜலசந்திக்கு மறுபக்கத்தில் உள்ள இந்த பாப் அல்-மந்தேப் ஜலசந்தியை ஹவுதிக்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தினால், அது அமெரிக்காவுடனான போரில் ஈரானுக்குப் பெரும் பலமாக அமையும். இது இரண்டாவது முக்கிய வர்த்தகப் பாதையையும் முடக்கி, உலகளவில் எண்ணெய் விநியோகத்தைக் குறைப்பதுடன் கச்சா எண்ணெய் விலையையும் கடுமையாக உயர்த்தும்.
விநியோகப் பாதைகள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் சர்வதேச சந்தையில் ‘பிரென்ட்’ (Brent) கச்சா எண்ணெய் விலை வியாழக்கிழமை 4 சதவீதம் வரை உயர்ந்து, பேரல் ஒன்று 105 டொலராகப் பதிவானது.
பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் தென்மேற்கு நகரமான காமிஸ் முஷைத்தில் (Khamis Mushait) ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சவூதி சிவில் பாதுகாப்பு அதிகாரிகளால் 24 மணி நேரத்தில் நான்காவது முறையாக அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்கும் வகையில், ஹவுதி அமைப்பினரைக் கட்டுப்படுத்துமாறு ஈரானுக்குச் சவூதி அரேபியா விடுத்துள்ள எச்சரிக்கையைப் பாகிஸ்தான், தெஹ்ரானிடம் கையளித்துள்ளது. இருப்பினும், “ஹவுதிக்கள் தமது கட்டுப்பாட்டில் இல்லை” என்றே ஈரான் பதிலளித்துள்ளதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“தேர்தலுக்குப் பின் போர் முடியும்” – ட்ரம்ப்
போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மக்கள் ஆதரவை வரலாறு காணாத அளவுக்குச் சரித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தவே ஈரான் முயற்சிப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
“தேர்தல் முடிந்த உடனேயே போர் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர்களால் இனிமேல் தாக்குப் பிடிக்க முடியாது” என்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும், ஈரானின் நடான்ஸ் (Natanz) யுரேனியம் செறிவூட்டல் மையத்திற்கு அருகில் நிலத்தடியில் அமைந்துள்ள பலத்த பாதுகாப்புமிக்க ‘பிகாக்ஸ் மவுண்டன்’ (Pickaxe Mountain) வளாகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த அச்சம் காரணமாகவே அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரியில் ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.










