அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றப் பொறுமையும் வியூகமும் மிக அவசியம் என்றும், தோல்வியைச் சந்திக்காமல் வெற்றியை அடைய முடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர் மற்றும் யுவதிகளுடனான கலந்துரையாடலின் போது, இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடு பொருளாதார வங்குரோத்து அடைந்திருந்த வேளையில், அதன் ஆட்சியைப் பொறுப்பேற்ற போது எவ்வாறு உணர்ந்தீர்கள் எனக் கேட்கப்பட்டதற்கு,
“அந்தச் சந்தர்ப்பத்தில் எவரும் நாட்டைப் பொறுப்பேற்க முன்வராதிடிருந்தால், நாட்டின் எதிர்காலமே இல்லாமற்போயிருக்கும். சவால்களைக் கண்டு அச்சப்படாமல் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது” என அவர் பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து, “நாட்டில் மீண்டும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, ஆட்சியைப் பொறுப்பேற்கும் சூழ்நிலை உருவானால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என யுவதி ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குச் சிரித்தபடியே பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, “நான் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. எனவே, நாட்டை மீண்டும் பொறுப்பேற்க முடியாது” எனக் குறிப்பிட்டார்.
