சவுதி அரேபியாவில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சவுதி அரேபிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எந்தவொரு மதத்தையும், மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் உரிமை எவருக்கும் கிடையாது. அனைத்து மதங்களையும் மதிப்பதும், பிறரது மத உணர்வுகளைப் புண்படுத்தாமல் இருப்பது தான் மனிதனுக்கு அழகு.
இறை தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைத்து மதத்தினரும் மத்திக்கும் நிலையில்,சிவராசா அனோஜன் நபிகள் நாயகத்தை சமூக வலைத்தளத்தில் இழிவுபடுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம்.
இருப்பினும், அல் குரானில் குறிப்பிட்டுள்ள படி,
நபி அவர்கள் கூறினார்கள்:
“ஒரு அடியான் மன்னிக்கும்போது, அல்லாஹ் அவனுடைய கண்ணியத்தை அதிகரிக்கிறான்.”
ஆகிய குறிப்பிற்கேற்ப, சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை தொடர்பில், அவரது குடும்ப நிலைமை மற்றும் மனிதாபிமான காரணிகளை கருத்திற்கொண்டும், சிவராசா அனோஜன் தான் செய்த தவறை உணர்ந்து இருப்பார் எனவும், சவுதி அரேபிய அரசு அவரது தண்டனை குறித்து கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.










