ஆட்டோ சாரதிக்கு மயக்கமருந்து கொடுத்து, பணம் மற்றும் அவர் அணிந்திருந்த ஆபரணங்களை கொள்ளையர்கள், கொள்ளையிட்டுச்சென்ற சம்பவமொன்று நேற்று (21) மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மஸ்கெலியா நகரில் 2ஆவது ஆட்டோ நிறுத்துமிடத்திலிருந்து, நோட்டன் பகுதியில் உள்ள லக்சபானவிற்கு செல்ல வேண்டும் எனக் கூறி 3 இளைஞர்கள், ஆட்டோவொன்றை வாடகைக்கு அமர்த்தி பயணித்துள்ளார்.
இவ்வாறு செல்லும் வழியில் ஆட்டோ ஓட்டுனருக்கு குளிர்பானம் ஒன்றை வழங்கி குடிக்குமாறு கூறியதுடன், தாங்களுடன் அருந்தியுள்ளனர்.
ஆட்டோ நோட்டன் பகுதியை அண்மித்தவேளையில் அதன் ஓட்டுனர் மயக்கமடைந்து, ஆட்டோ வடிகாலில் சென்று நின்றதும் அதில் பயணித்த இளைஞர்கள் ஆட்டோ சாரதியின் பணம்,நகை என்பவற்றை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
ஆட்டோ சரிந்துகிடப்பதை கண்ட மக்கள், மயக்கமுற்றிருந்த சாரதியை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். நோட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்
