பெருந்தோட்டப்பகுதிகளில் பாதை சீரமைப்புக்கள் பஸ் போக்குவரத்துக்கள், மின் இணைப்புக்கள், நீர் விநியோகங்கள் ஆகியனவற்றில் பெரும் பின்னடைவுகள் எதிர்நோக்கப்பட்டுவருவதாக, பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டத்தில், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டம், பதுளை அரச செயலக கேட்போர் கூடத்தில் (இன்று) 17.02.2021ல் குழுத்தலைவர் சுதர்சன தெனிபிட்டிய தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முசாம்மில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகமை உள்ளிட்டு மாவட்ட அரச திணைக்கள பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் என்ற வகையில் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அவ் வேளையில், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் பேசுகையில், பதுளை மாவட்ட பெருந்தோட்டப் பாதைகளின் சீரமைப்புக்கள், முறையாகவோ, கிரமமாகவோ இடம்பெறுவதாகத் தெரியவில்லை. இதனால், பெரும் பாதிப்புக்களை பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். ஆகவே, இது விடயத்தில் காலம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அடுத்து, பதுளை மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளில் முறையாக இ.போ.ச பஸ் சேவைகள் இடம்பெறுவதில்லை. எனது முயற்சினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இ.போ.ச. பஸ்களில் சிலவும் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எந்தக்காரணம் கூறினாலும், எமது மக்கள் பஸ் சேவைகள் இடம்பெறாதலால், பெரும் பாதிப்புக்களை அடைந்த வண்ணமேயுள்ளனர். பதுளை மாநகருக்கு பல்வேறு தேவைகள் கருதி செல்வோர், கருதி பாடசாலைகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நகருக்கு தொழிலுக்கு செல்வோர், நோயாளாகள்; ஆகியோரே பாதிக்கப்படுபவர்களாவர்.
அத்துடன், பதுளை மாவட்ட பெருந்தோட்டப் பகுதிகளில் மரங்களிலான மின்கம்பங்களே, மின் இணைப்பிற்கான பயன்படுத்தப்படுகின்றன. கொங்கிறீட்டிலான மின் கம்பங்கள் பயன்படுத்துவதே இல்லை. இதற்கென்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும்; அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, மரங்களிலான மின் கம்பங்கள் பயன்படுத்துவதை விடுத்து, கொங்கிறீட்டிலான மின்கம்பங்களை பயன்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு, கேட்டுக்கொளகின்றேன்.
அடுத்து, நீர்வடிகால் அமைப்பு திணைக்களத்தினூடாக விஸ்தரிக்கப்பட்டு வரும் நீர் விநியோகத்திட்டங்களை விஸ்தரிக்கப்படும் பகுதிகளில்இ அமைந்துள்ள தோட்டப்பதிகளையும் இணைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்’ என்றார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரினால் முன் வைக்கப்பட்ட மேற்படி கோரிக்கைகள் குறித்து, கூடிய கவனம் செழுத்தப்படுமென்று இணைப்புக்குழுத்தலைவர் உறுதியளித்தார். அத்துடன், இவ்விடயங்கள் தொடர்பாக குறிப்பிட்ட விடயங்களுக்கு திணைக்களப் பணிப்பாளர்களும், பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை, நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
எம். செல்வராஜா, பதுளை










