பஸிலுக்காக அதிரடியாக களமிறங்குவாரா மங்கள?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்குமிடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது எனவும், தெற்கு அரசியலில் இது திடீர் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் தகவல்கள் வெளியானதால் கடந்தவாரம் இவ்விவகாரமும் பேசுபொருளாக மாறியது.

நாடாளுமன்ற அரசியலுக்கு ‘குட்பாய்’ கூறினாலும் செயற்பாட்டு அரசியலுக்கு மங்கள சமரவீர இன்னும் விடைகொடுக்கவில்லை. பலமானதொரு சிவில் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். எந்நேரத்தில் வேண்டுமானாலும் மங்கள அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம் என்பதால் அவர்மீதான கழுகுப்பார்வைகள் தொடரவும் செய்கின்றன.

மறுபுறத்தில் பஸில் ராஜபக்சவும் திரைமறைவில் அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவருகின்றார். ஆளுங்கூட்டணியிலுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் பஸிலை வெளிப்படையாகவே விமர்சித்துவருவதுடன், அவர்களின் கட்சி சார்ந்த பிக்குகளும் சொற்கணைகளைத் தொடுத்துவருகின்றனர்.இதனால் கடுப்பில் இருக்கும் பஸில், பங்காளிகளின் கொட்டத்தை அடக்குவதற்கு மொட்டு கட்சியிலுள்ள உறுப்பினர்களை தம்பக்கம் வளைத்துபோட்டுவருகிறார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் தெற்கு அரசியலில் இரு முக்கிய புள்ளிகளாக கருதப்படும் பஸிலும், மங்களவும் சந்திப்பில் ஈடுபட்டமைதான் பலருக்கு தலையிடியாக மாறியது.உண்மையாலுமே அவ்வாறானதொரு சந்திப்பு நடைபெற்றதா, இது பற்றி நாம் சுழியோடினோம்.

கொழும்பிலுள்ள சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மங்கள பங்கேற்றிருந்தார்.இந்நிகழ்வுக்கு பஸில் ராஜபக்சவும் வருகை தந்திருந்தார். இதன்போது இருவரும் சந்தித்துக்கொண்டனர் எனவும், ஓரிரு நிமிடங்களே இருவரும் உரையாடினர் எனவும் அறியமுடிந்தது.

எதுஎப்படி இருந்தாலும் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இருவரும் பெயர் போனவர்கள்.  இருவரையும் சில பிக்குகள் வெறுக்கும் நிலை காணப்படுகின்றது. எனவே, எதிர்காலத்தில் நெருக்கடியான சூழ்நிலையொன்று வரும்பட்சத்தில் இருவரும் சங்கமித்து செயற்படுவதற்கான சாத்தியமும் இல்லாமல் இல்லை.

Related Articles

Latest Articles