மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்து

மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி மக்கள் பிரதிநிதிகளை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் மாகாணசபையில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை ஒன்றையும் கட்சியின் பெண்கள் அமைப்பு நிறைவேற்றி இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சி கண்டி மாவட்ட தலைவி சாந்தினி கோன்காகே தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

மாகாணசபை தேர்தலை நடத்தி அதற்கான மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அரசாங்கம் மாகாணசபைக்கு உரித்தான நிறுவனங்களின் நிர்வாகத்தை அரச அதிகாரிகளுக்கு கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருகின்றது. மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டிய நிறுவனங்களை அரச அதிகாரிகளை நியமித்து, அரசாங்கத்துக்கு தேவையான முறையில் இதன் நிர்வாகத்தை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. அதனால் மாகாணசபை தேர்தலை நடத்துவதை தொடர்ந்தும் காலம் கடத்தாமல் விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.

அத்துடன் மாகாணசபையில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரிப்பதற்கான பிரேரணை ஒன்றையும் கட்சியின் பெண்கள் அமைப்பு நிறைவேற்றி இருக்கின்றது. சர்வதேச பெண்கள் தினத்திலே இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

மேலும் 2017ஆம் ஆண்டு பிரதேச சபை தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு 25 வீத கோட்டாவை அறிமுகப்படுத்தியது ஐக்கிய தேசிய கட்சியாகும். அதேபோன்றதொரு பிரேரணையை மாகாண சபையிலும் உள்வாங்க மாகாணசபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் பிரேரித்திருக்கின்றோம் என்றார்.

Related Articles

Latest Articles