“வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட சம்பள உயர்வை முதலாளிமார் சம்மேளனம் வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமையாகும். சம்பள நிர்ணய சபை உடன்பாட்டை காரணம் காட்டி முதலாளிமார் சம்மேளனம் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முற்பட்டால் அது கம்பனிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் மத்தியில் முறுகலை ஏற்படுத்துமென்பதை எச்சரிக்கையுடன் வலியுறுத்த விரும்புகிறேன்.”
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்று கொடுக்க வேண்டுமென்ற அமரர் ஆறுமுகம் தொண்டமானின் கனவை அவரது புதல்வர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என இ.தொ.கா உப செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி.வி.சென்னன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர்மேலும் கூறியதாவது,
கடந்த 5 வருடங்களுக்கு முன்னராக இ.தொ.காவின் முன்னாள் தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ரூபா ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தார்.
தாம் எதிர் கட்சியில் இருந்த போதும் குறித்த சம்பள உயர்வு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். ஒரு கட்டத்தில் இக்கோரிக்கை சமூக போராட்டமாக மாற்றமடைந்து மலையகத்தில் புதுவித எழுச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பள கோரிக்கை தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. எனினும் தான் முன்வைத்த காலை பின் வைக்காமல் முதலாளிமார் சம்மேளனத்திற்கு தொடர் அழுத்தங்களை பிரயோகித்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக அவருடைய திடீர் மறைவுக்கு பின்னர் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோஷம் முற்று பெற்றுவிடுமென எதிர்தரப்பினரும் கம்பனி நிர்வாகத்தினரும் நினைத்தனர்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வழங்கிய தேர்தல் வாக்குறுதியின் படி முதலாளிமார் சம்மேளனத்துடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன. சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சர் முன்னிலையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்கவில்லை.
இறுதியில் சம்பள நிர்ணய சபையின் ஊடாக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்று கொடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பாக அரச வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. காலங் கடந்தேனும் பெற்றுக் கொடுக்கப்பட்ட இச்சம்பள உயர்வால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் இவ்விடயத்தில் காட்டிய அர்ப்பணிப்பு இ.தொ.கா என்றும் மலையக மக்கள் நலனில் அக்கறையுள்ள அமைப்பு என்பதை நிரூபித்துள்ளது.
வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட சம்பள உயர்வை முதலாளிமார் சம்மேளனம் வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமையாகும். சம்பள நிர்ணய சபை உடன்பாட்டை காரணம் காட்டி முதலாளிமார் சம்மேளனம் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முற்பட்டால் அது கம்பனிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் மத்தியில் முறுகலை ஏற்படுத்துமென்பதை எச்சரிக்கையுடன் வலியுறுத்த விரும்புகிறேன். எதிர்வரும் காலங்களில் மலையக மக்களின் சமூக நலனில் இராஜாங்க அமைச்சர் ஜீவனுடன் இணைந்து தொடர்ந்து அர்பணிப்புடன் செயற்பட்டு பல நன்மைகளை பெற்று கொடுப்போம் என்றார்.
