மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்பில் தனது உறுதியான நிலைப்பாடு என்னவென்பதை அரசு உடன் அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியது.
ஜே.வி.பியின் ஊடகவியலாளர் மாநாடு கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்றது. இதன்போது மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மாகாணசபைத் தேர்தல் எப்போது, எந்த முறைமையின்கீழ் நடத்தப்படும் என்பது தொடர்பில் அரசு இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனாலும், 13 ஆவது திருத்தச்சட்டம் அமுலாக வேண்டும் என ஜெனிவாவில் இந்தியா வலியுறுத்தியபோது, ஜுன் மாதம் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற தகவலை அரசு வெளியிட்டிருந்தது. அதன்பின்னர் அந்த அறிவிப்பு மாயமானது. தற்போது மீண்டும் கருத்து வெளியிடப்பட்டுவருகின்றது.
எனவே, மாகாணசபைத் தேர்தல் எப்போது, எந்த முறைமையின்கீழ் நடத்தப்படும் என்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும்.” – என்றார்.
