ஆண்களை போன்று பெண்களுக்கும் உலகில் முதல்முறையாக சம சம்பளத்தை வாங்கிக்கொடுத்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான்தான். சௌமியமூர்த்தி தொண்டமான்தான், ஆறுமுகன் தொண்டமான் வழியில் தொடர்ந்து பெண்களுக்காக இ.தொ.கா குரல் கொடுக்குமென பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும் இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர்தின விழா நேற்று பதுளையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இ.தொ.காவின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட பதுளையில் உள்ள இ.தொ.காவின் முக்கியஸ்தர்களும் மகளிர் அமைப்பினரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய செந்தில் தொண்டமான் மேலும் கூறியதாவது,
நாட்டில் இருக்கும் பெண்களில் அதிகமாக மலையகப் பெண்கள்தான வேலைக்குச் செல்கின்றனர். இவர்கள் தங்களது குடும்பத்திற்கு மாத்திரமல்ல நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முதுகெலும்பாகவுள்ளனர்.
ஒரு தோட்டத்தில் 10 பெண்கள் இருந்தால் அவர்களில் 7 பேர் வேலை செய்பவர்களாக உள்ளனர். ஏனைய சமூகங்களில் அவ்வாறு இல்லை. மலையக பெண்கள்தான் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
பெண் சமுதாயத்திற்கு மதிப்பளிக்கும் முகமாகவும் அவர்களுக்கு சம அந்தஸ்தை பெற்றுக்கொடுக்கும் முகமாகவும் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானும் ஆறுமுகன் தொண்டமானும் இறக்கும்வரை தொடர்ந்து பாடுபட்டுவந்தனர்.
ஆண்களை போன்று பெண்களுக்கும் சம சம்பளத்தை வாங்கிக்கொடுத்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான்தான். உலகில் முதல்முறையாக ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம்பளம் பெற்றுக்கொடுத்த தலைவரே சௌமியமூர்த்தி தொண்டமான். “ஆண்களும் பெண்களும் ஒரே அளவான வேலையை செய்யும் போது ஆண்களுக்கு மாத்திரம் அதிகமாக சம்பளத்தை வழங்குவது ஆணாதிக்கத்திற்கும் பெண்களின் சம அந்தஸ்திற்கும் பாதிப்பாக அமையும்” என்ற கருத்தியலின் பிரகாரம் பெண்களுக்கு இவ்வாறு சம சம்பளத்தை வாங்கொடுத்திருந்தார்.
அதேபோன்று அமரர் ஆறுமுகன் தொண்டமானும் பெண்களின் உரிமைக்காகவும் சமத்துவத்திற்காகவும் குரல்கொடுத்திருந்தார் என்றார்.
இதேவேளை, கடந்த வருடம் முதல் கொவிட் தொற்று காரணமாக வழமை போன்று இரத்ததானம் செய்ய முடியாதிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து நாட்டின் வளர்ச்சிகாக பாடும் மலையக யுவதிகள் முதல்கட்டமாக 100 பேர் இரத்ததானம் வழங்க உள்ளனர். இதற்கான பதிவு இன்று பண்டாரவளையில் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றதுடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைமுதல் இரத்ததானத்தை வழங்கவும் உள்ளனர்.










