கலஹா பிரதேச வைத்தியசாலையில் சேவையாற்றும் தாதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 13 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று பெறப்பட்டன.
கலஹா வைத்தியசாலையில் கடந்த 23 ஆம் திகதி நோயாளர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கான ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை தாதியர் ஒருவர் வழங்கியுள்ளார். குறித்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு வைத்து அவர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பரிசோதனை முடிவுகள் 27 ஆம் திகதி வெளிவந்த நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து கலஹா வைத்தியசாலையிலுள்ள தாதிக்கு கடந்த 28 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு இன்று வெளியானது. அதில் தாதிக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது.
இதனால் அவருடன் நேரடி தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 13 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
அதேவேளை, சுகாதார பாதுகாப்பு சகிதம், அவசர தேவையிருந்தால் மாத்திரம் கலஹா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருமாறு மக்களிடம் சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலஹா நிருபர் – ரம்யா
