இணையவழி கல்விக்காக மலையேறும் மாணவர்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டு மாணவர்களின் கல்விச் செயற்பாடு இணைவழியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் மாணவர்களுக்கு கற்பித்தலை வளவாளர்களைக் கொண்டு தொலைக்காட்சி ஊடாக வீடியோ பாடங்களை நடாத்தினாலும் மாணவர் நலன் கருதியதான சில ஆசிரியர்களின் தன்னார்வ செயற்பாடுகளினாலும் மாகாண, வலயக்கல்வி காரியாலயங்களின் பணிப்புரைக்கமைய பாடசாலை அதிபர்களின் வேண்டுதலின் அடிப்படையிலும் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வட்ஸ்அப் மற்றும் ZOOM நிகழ்நிலையின் ஊடாகவும் கற்பித்தலை தொடர்ந்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த இணையவழி வகுப்புகளுக்கு அண்ணளவாக 50வீதமான மாணவர்களே பங்குகொள்கின்றனர். இதற்கு காரணம் பெரும்பாலான மாணவர்களின் வீடுகளில் கணணி வசதி இல்லாமை மற்றும் கையடக்க ஸ்மார்ட் தொலைபேசி இல்லாமையும். அப்படி இருப்பினும் தமது பிரதேசங்களில் தொலைப்பேசிக்கான வலையமைப்பு வசதி இல்லாமை பெரும் குறைபாடாக உள்ளது.

அந்தவகையில் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முருத்தெட்டுவ, யோகம உட்பட ஆறு கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இணைய வசதியை பெற்றுக்கொள்ளக்கூடிய வலையமைப்பு இல்லாமையால் குறித்த பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.

தமது பாடசாலைகளில் நடாத்தப்படும் இணைய வகுப்புகளுக்கு பங்குகொள்வதற்காக அம்மாணவர்கள் வலையமைப்பை பெற்றுக்கொள்ளுமுகமாக தமது இருப்பிடத்தில் இருந்து உயர்ந்த இறப்பர் மலைப்பிரதேசங்களுக்கு சென்று இணைய வழியில் கல்வியை தொடர்கின்றனர்.

இவ்வாறு செல்லும்போது காட்டுவழியின் ஊடாகவே பயனிக்கவேண்டும். தற்பொழுது தொடர்ந்து மழை பெய்துவருவதால் மலை உச்சியில் கூடாரம் அமைத்து கல்விக் கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும் இதற்கு தீர்வாக அரசாங்கம் தொலைப்பேசி நிறுவனங்களுடன் தொடர்புக்கொண்டு குறித்த பிரதேசங்களுக்கு வலையமைப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தொலைப்பேசி கோபுரங்களை அமைக்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

Related Articles

Latest Articles