உள்நாட்டுப் போர் வலுப்பெற்றுள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சுமார் 50 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் வசிப்பதாக வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். .
43 இலங்கையர்கள் காபுல் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதரகத்தில் பணியாற்றுவதாக அறிக்கையிடப்பட்டுள்ளதாக, ஆப்கானிஸ்தானுக்கான இலங்கை தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
அவர்களில் பெரும்பாலானோர் இலங்கைக்கு திரும்புவதற்கான விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். அந்நாட்டில் காணப்படும் விமான சேவைக்கான வசதிகளுக்கு அமைய, இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர்.
20 வருடங்களாக ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் யுத்த நடவடிக்கையில் இணைந்திருந்த அமெரிக்கா உள்ளிட்ட பிரபல மேற்குலக நாடுகளின் இராணுவத்தினர் அங்கிருந்து வௌியேறியதன் பின்னர் தலிபான்கள், ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்ற தமது போராட்டத்தை வலுப்படுத்தினர்.
அதற்கமைய, ஆப்கானிஸ்தானின் தலைநகரானா காபுல் நகரத்திலும் இன்று பிற்பகல் தலிபான்கள் உள்நுழைந்துள்ளனர்.
அந்நாட்டின் ஏனைய பிரபல நகரங்களை தலிபான்கள் ஏற்கனவே கைப்பற்றியுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில், காபுல் நகரிலுள்ள வௌிநாட்டு இராஜதந்திரிகளை பாதுகாப்பாக வௌியேற்றுவதற்காக, அமெரிக்க துருப்பினர் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.










