21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பானது ஊடகத்துக்கான கண்காட்சியாகக்கூட இருக்கலாம் – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சாடியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொலிஸ்மா அதிபரால் நேற்று முன்தினம் மாலை விடுக்கப்பட்ட அறிவிப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் இவ்வாறு சாடினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும், தாக்குதலின் பின்புலம் மற்றும் பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்பட வேண்டும் என நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் நாம் குரல் எழுத்தோம். பேராயர் உள்ளிட்ட தரப்பினரும் இதனை வலியுறுத்தினர்.
தாக்குதல் நடைபெற்று ஒன்றரை வருடங்களுக்கு பிறகே பொலிஸ்மா அதிபர் ஒருவர் வெளியில் வந்து அது தொடர்பில் கருத்து வெளியிடுகின்றார். கறுப்பு கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு கடும் எதிர்ப்புகள் வெளிக்கியம்பியுள்ள பின்புலத்திலேயே குறித்த அறிவிப்பும் பொலிஸ்மா அதிபரால் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, இது கண்காணியாகக்கூட இருக்கலாம். ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் சௌபாக்கிய வேலைத்திட்டத்தில் உறுதி வழங்கப்பட்டிருந்தது. அதன்பிரகாரம் அரசு செயற்படாதது ஏன்? “ – என்றார்.










