இத்தாலி பிரதமர், ஐரோப்பா சபாநாயகரை சந்திக்கிறார் பிரதமர் மஹிந்த

ஐரோப்பியாவில் நடைபெறவுள்ள உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது எமது நாட்டுக்கு கிடைத்த பெருமையாகும் – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எமது நாட்டு தலைவர்களுக்கு ஆசியாவில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் மதிப்பும், பெரும் வரவேற்பும் உள்ளது. இதனால் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

ஐரோப்பியாவில் நடைபெறும் உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் பங்கேற்று, ஆரம்ப நிகழ்வில் பிரதான உரையாற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் போலோக்னா நகரிலேயே குறித்த சர்வதேச மாநாடு இடம்பெறவுள்ளது. அடுத்தவாரம் போலோக்னா பல்கலைக்கழகத்தில் மாநாடு ஆரம்பமாகும்.

போலோக்னா பல்கலைக்கழகம் என்பது ஐரோப்பியாவில் உள்ள பழமையான பல்கலைக்கழகமாகும். பிரிட்டனில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களைவிடவும் அது பழமையானது.

இந்த சர்வதேச மாநாட்டில் இராஜதந்திரிகள் பங்கேற்பார்கள். இலங்கை தொடர்பில் ஒரு சில தரப்புகளால் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டுள்ள மாயையை உடைத்து, உண்மை நிலைவரத்தை விளக்குவதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும்.

இத்தாலி நாட்டின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆகியோரை பிரதமர் மஹிந்த ராஜபக்ச சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மேற்படி சர்வதேச மாநாடு இத்தாலியில் நடைபெறும் சூழ்நிலையில்தான் ஜெனிவா நகரில் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரும் இடம்பெறுகின்றது. இம்மாநாட்டில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் ‘ஒன்லைன்’ ஊடாக நான் பற்கேற்கவுள்ளேன்.

6 மாதங்களுக்கு முன்னர் ஜெனிவா மாநாடு இடம்பெற்றது. கொரோனா நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் அப்போது தெளிவுபடுத்தப்பட்டது.” -என்றார்.

Related Articles

Latest Articles