நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இன்று முன்வைத்த பட்ஜட் புஷ்வாணத்தைப் போன்றதென முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமனா பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
பட்ஜட் ஒன்று வரும்போது மக்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்றும் இம்முறை அப்படி எந்தவொரு எதிர்பார்ப்பும் மக்களிடம் இல்லையென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மலையகத்தில் லயன்களை இல்லாதொழிப்பதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மிகக்குறைந்த நிதியே இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கிய நிதியைக் கூட இவர்கள் மலையகத்திற்கு செலவிடுவார்களா என்ற சந்தேகம் இருக்கிறது.
காரணம், அரசாங்க செலவீனம் 3 ஆயிரத்து 912 பில்லியன் ரூபாவாக இருக்கிறது. வருமானம் 2 ஆயிரத்து 284 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது. எனவே, எஞ்சிய தொகைக்கு என்ன செய்யப் போகிறது என்பதற்கு எந்தத் திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. ஆட்சியில் உள்ள இவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் மக்கள் நிலை கவலையாகவே இருக்கிறது. என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.