யாழ்ப்பாணம், மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.
மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண், தன்னுடைய பச்சிளம் குழந்தை ஒன்றை நிலத்தில் புதைப்பதற்கு அவருடைய தாயாருடன் முனைந்ததாக அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் இருவரும் செயற்படும்போது, குழந்தை அழுததால் தாம் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை உணர்ந்து குழந்தையை மீட்டுக் காப்பாற்றியதாக பொலிஸாரின் விசாரணைகளில் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், குழந்தை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.