பசறைப் பிரிவு பெருந்தோட்ட எல்லையில் ‘மக்கள் சேவை நிலைய’ மொன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போது, தான் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, பசறை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கும், பசறை பிரதேச சபை உறுப்பினர் கண்மணி சிவனேசனுக்குமிடையில் வாய்த்தர்க்கத்தையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினரை தடியினால் தாக்கியதாக, அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அப்பிரதேச சபை உறுப்பினர் தற்போது பசறை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், இது குறித்து, பாராளுமன்ற உறுப்பினரிடம் வினவிய போது, அவர் பிரதேச சபை உறுப்பினரை தாக்கியதை முற்று முழுதாக மறுத்தார்.
இச்சம்பவம், அரசின் ஒரு இலட்சம் அபிவிருத்திப் பணி வேலைத்திட்டத்திற்கமைய பசறைப் பிரிவு பெருந்தோட்டத்தின் எல்லையில் மக்கள் சேவை நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 03-02-2022ல் முற்பகல் இடம்பெற்ற போதே, மேற்படி சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
பசறைப் பிரிவு பெருந்தோட்டத்தில் மக்கள் சேவை நிலையம் நிருமானிப்பதற்கு, மேற்படி தோட்ட தொழிலாளர்களது மூன்று தனிக்குடியிறுப்புக்கள் தடையாக இருப்பதால், அக்குடியிறுப்புக்கள் மூன்றிலும் தொழிலாளர் குடும்பங்களை வெளியேறுமாறு முன் அறிவித்தல் அறிவிப்புக்களும் அக்குடியிறுப்புக்களில் ஒட்டப்பட்டுள்ளன. பசறை பிரதேச செயலகத்தினால், இவ் அறிவித்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
குறிப்பிட்ட மூன்று தொழிலாளர் குடியிறுப்புக்களிலும் எட்டுப் பேர் இருந்து வருகின்றனர். 45 வருட காலமாக மேற்படி குடியிறுப்புக்களில் தொழிலாளர்கள் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பசறைப் பிரிவு பெருந்தோட்டத்தில் காணி சுவீகரிப்பு, தொழிலாளர் குடியிறுப்புக்கள் மூன்றில் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டிருப்பமை, பசறை பிரதேச சபை உறுப்பினர் கண்மனி சிவனேசன் தாக்கப்பட்டமையை கண்டித்தும், பசறை பெருந்தோட்டங்களின் நான்கு பிரிவுகளிலும் சுமார் 400 தொழிலாளர்கள் தொழிலுக்கும் செல்லாமல் ஆர்ப்பாட்டப் பேரணியில் இரண்டாவது தடவையாக இன்றும் 03-02-2022ல் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 25-01-2022 லும் தொழிலாளர்கள் காணி சுவீகரிப்பிற்கு எதிராக போராட்டங்களை நடாத்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. பசறை பிரதேச செயலகத்தூடாக அரசு மேற்படி காணி சுவீகரிப்பினையும், குறிப்பிட்ட தொழிலாளர் குடியிறுப்புகள் மூன்றை தம் வசமாக்கிக் கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எம். செல்வராஜா, பதுளை
