முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கௌரவ பதவியை பெற்றுக்கொடுக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்ததொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தயாசிறி ஜயசேகர மேலும் கூறுகையில்,
“மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறந்த பதவியொன்றை வழங்குமாறு கோரி எந்தவித கடிதத்ததையும் நாம் அனுப்பவில்லை.
எனினும், அவருக்கு உரிய பதவியொன்றை அரசாங்கம் வழங்குமென நம்புகிறோம்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினை கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினை இம்முறை நடத்தாமல் இருக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களை ஒன்றுதிரட்டாமல் சமய வழிபாடுகளை பெல்லன்வில விகாரையில் எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மைத்திரிக்கு பரிசளிக்கும் வகையில், பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.