உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரி்க்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Who என்று அழைக்கப்படுகிற உலக சுகாதார நிறுவனம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது ஐ.நா.சபையின் துணை அமைப்பாகும்.
உலகளவிலான சுகாதார விவகாரங்களை இந்த அமைப்பு கையாள்கிறது. 194 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. ஆனாலும் இந்த நிறுவனம், செயல்படுவதற்கான முக்கிய நிதி பங்களிப்பை அமெரிக்காதான் வழங்கி வருகிறது.
தற்போது உலகமெங்கும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி, பெருத்த உயிர்ச்சேதங்களையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு உதவி செய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக சீனா கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.
இதனிடையே கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனா சார்பு நிலையில் உள்ளதால் அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்வதாக கடந்த மே மாதம் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
அந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும் அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த பல மில்லியன் டாலர்கள் நிதியை நிறுத்தினார்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறியது.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் அன்ட்டோனியோ குட்டரசிற்கு கடந்த 6 ஆம் திகதி அனுப்பிய கடிதத்ததில் கூறியுள்ளதாவது:
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்கிறது. ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6- ஆம் திகதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது மற்ற நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.