தோட்ட தொழிலாளியின் மகன்மீது தாக்குதல்: நீதிகோரி தொழிலாளர்கள் போராட்டம்

பதுளை மாவட்ட, ஹாலிஎல உனுகல தோட்டத்தில் நேற்று ( 17 ) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (18) தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உனுகல தோட்ட காரியாலயத்தில் பணியாற்றும் ஒரு தோட்ட தொழிலாளியின் மகன், தோட்ட அதிகாரியால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான இளைஞர் உடனடியாக பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஹாலிஎல, உனுகல தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து வேலைநிறுத்தத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், ஐக்கிய தொழிலாளர் முன்னணி தலைவர் என்ற முறையில் ஆனந்தராஜா பாபு சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்படும் தோட்ட அதிகாரி உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்

(நடராஜா மலர்வேந்தன் )

Related Articles

Latest Articles