விண்வெளியில் புதிய சரித்திரம்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘விக்ரம்-1’

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவது தனியார் தயாரிப்பான ‘விக்ரம்-1’ (Vikram-1) சுற்றுப்பாதை ஏவுகலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

22 மீட்டர் உயரமும், நான்கு நிலைகளையும் (four-stage) கொண்ட இந்த ராக்கெட் வானத்தை நோக்கிச் சீறிப் பாய்ந்தபோது, அது மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்தது.

மிஷன் ‘ஆகாமன்’ (Aagaman) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளிப் பயணமானது, இந்திய மண்ணில் இருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு ராக்கெட்டை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த ஓர் இந்தியத் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் முதல் முயற்சியாகும்.

இந்த விண்கலம் பூமியிலிருந்து 450 கிலோமீட்டர் உயரத்திலுள்ள சுற்றுப்பாதையை 60 டிகிரி சாய்வில் அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த ‘ஆகாமன்’ பயணம் முதன்மையாக ஒரு தொழில்நுட்ப விளக்கப் (Technology Demonstration) பயணமாகும்.

ஸ்கைரூட் நிறுவனத்தின் கூற்றுப்படி, வெற்றிகரமான ஏவுதலை மேற்கொள்வது, ஏவுதள கோபுரத்தைத் பாதுகாப்பாகத் தாண்டிச் செல்வது மற்றும் ராக்கெட் மேலேறும்போது தேவையான விமானத் தரவுகளைச் சேகரிப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.

15 நிமிடப் பரப்பரப்பு

விண்ணில் ஏவப்பட்டதில் இருந்து சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் இந்த ஒட்டுமொத்த பயணத்தில், ராக்கெட் ஒலியை விட அதிவேகமாகப் பயணித்து சுற்றுப்பாதையைச் சென்றடையும். அப்போது, செயற்கைக்கோள்களைத் துல்லியமாகச் சுற்றுப்பாதையில் செலுத்துவதை விண்வெளி கட்டுப்பாட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள்.

இந்த ராக்கெட் எதிர்காலத்தில் பூமியின் குறைந்த சுற்றுப்பாதைக்கு (Low-Earth orbit) 350 கிலோ வரை எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இது சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மிகவும் ஏற்றதாகும்.

முக்கியச் சிறப்பம்சங்கள்

இது முழுமையாகக் கார்பன்-கம்போசிட் (all-carbon-composite) கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் சுற்றுப்பாதை ராக்கெட்டாகும்.

சுற்றுப்பாதை ஏவுகலத்தில் பயன்படுத்தப்பட்ட இந்தியாவின் முதலாவது முப்பரிமாண (3D-printed) திரவ எஞ்சின் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

இந்த விண்வெளிப் பயணத்தில் இந்திய மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பல செயற்கைக்கோள்கள், சுற்றுப்பாதை சோதனைக் கருவிகள் மற்றும் ரோபோடிக் தொழில்நுட்பக் கருவிகள் விண்ணுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இப்பயணத்தின் வெற்றி, பல ஆண்டுகால உழைப்பிற்குச் சான்றாக அமைவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் விண்வெளித் துறை சீர்திருத்தங்களின் தாக்கத்தை உலகிற்கு உணர்த்தும். மேலும், இந்தியத் தனியார் நிறுவனங்கள் அடிக்கடி வணிகரீதியான விண்கலங்களை ஏவுவதற்கும் இது வழிவகுக்கும்.

Related Articles

Latest Articles