129 ஆண்டுகள் பழமையான தனிமைப்படுத்தல் சட்டத்தில் மாற்றம் – தொற்றுநோய் சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயாராகிறது

இலங்கையில் நடைமுறையில் உள்ள 1897ஆம் ஆண்டின் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்காக மீளாய்வுக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய பொது சுகாதார சவால்களை கருத்தில் கொண்டு, 1897ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் தேவையான மாற்றங்களை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கும், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கையில் பயன்படுத்தப்படும் பிரதான சட்டமாக இந்த கட்டளைச் சட்டம் காணப்படுகிறது.

மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் சர்வதேச மற்றும் உள்நாட்டு போக்குவரத்து தற்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதால், தொற்றுநோய்கள் நாடுகளின் எல்லைகளைக் கடந்து பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான சர்வதேச பயணங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளும் தொற்றுநோய்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வேகமாக பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த 1897ஆம் ஆண்டு சட்டத்தை திருத்துவதற்கு 2016ஆம் ஆண்டிலேயே அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்ட போதிலும், அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள அந்த திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து, அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய பொருத்தமான மாற்றங்களை பரிந்துரைப்பதற்காக மீளாய்வுக் குழுவொன்றை நியமிக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட தொற்றுநோய் சூழ்நிலைகளிலிருந்து பெற்ற அனுபவங்களும் இந்த மீளாய்வின்போது கவனத்தில் கொள்ளப்படவுள்ளன. தற்போதைய மற்றும் எதிர்கால பொது சுகாதார சவால்களை திறம்பட எதிர்கொள்ளக்கூடிய வகையில் நாட்டின் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதே முன்மொழியப்படும் புதிய திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும்.

Related Articles

Latest Articles