’20’ ஐ நிறைவேற்றியே தீருவோம்! பீரிஸ் சூளுரை!!

அரசியலமைப்பின்  ’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்க்கட்சிகள் சவாலுக்குட்படுத்தினாலும் அதனை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்று அமைச்சர் பேராசிரியர் ஜீ.எஸ். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் வேண்டும் என சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதில் எமக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது.எனவே, சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்பது உறுதியானதொன்று.

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் உரிமை அனைவருக்கும் இருக்கின்றது. அந்த அடிப்படையில் எதிரணிகள் தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்வதும் நல்லதுதான், ஏனெனில் குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்பது உறுதியாகும்.

அதேவேளை, தனிநபர்களை இலக்கு வைத்து ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படவில்லை. ஆனால், ராஜபக்ச குடும்பத்தினரை இலக்குவைத்தே ’19’ ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு செயற்பட்டவர்களே ’20’ ஐவும் அவ்வாறு பார்க்கின்றனர்.

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனக்கூறப்படுவதெல்லாம் கட்டுக்கதையாகும்.” – என்றார்.

Related Articles

Latest Articles