நோர்வூட் முதல் பொகவந்தலாவ வரையிலான வீதியை புனரமைக்குமாறு வலியுறுத்தி போராட்டம் (படங்கள்)

நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில் போக்குவரத்தினை மேற்கெள்ள முடியாத நிலை காணப்படுகின்றமையினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவ டின்சின் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

எதிர்ப்பு பதாதைகளை தாங்கியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு இந்த ஆர்ப்பாட்டம் 20.09.2022 அன்று செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவ பிரதேச சாரதிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குறித்த வீதியினை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கபட்ட போதிலும் வீதியின் புனரமைப்பு பணிகள் இடையில் இடைநிறுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ளதாகவும், தற்போது இந்த வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும், இந்த வீதியின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் கர்ப்பிணி தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

எமது வீதியினை புனரமைத்து தராமல் எந்த ஒரு அரசியல்வாதியும் வாக்கு கேட்டு வரவேண்டாம் என ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டியதோடு, பொகவந்தலாவ டின்சின் நகரில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி பொகவந்தலாவ நகர் வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.

க.கிஷாந்தன்

Related Articles

Latest Articles